மைல் கற்கள்
அரசு உருவாக்கம் வணிகப் பெருக்கம் காரணமாக பல்வேறு நகரங்கள் உண்டாகின. இந்நகரங்கள் ஒன்றுடன் ஒன்று இணைக்கப்பட்டு பெருவழிகள் உண்டாகின. இதன் காரணமாகப் பொருட்கள் ஓரிடத்திலுந்து ஓரிடத்திற்கு கொண்டு செல்வது எளிதாயிற்று, சோழர் பாண்டியர் கல்வெட்டுகளில் பலவற்றில் பெருவழிகள் பற்றிய குறிப்புகள் உள்ளன. கோவை மாவட்டம் சுண்டைக்காய்முத்தூரில் உள்ள கி.பி. 10 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ஒரு பாறைக் கல்வெட்டு ஒரு பண்டைய பெருவழியின் அருகிலேயே உள்ளது.
இப்பெருவழிக் கல்வெட்டியல் ‘இராஜகேசரிப் பெருவழி’ என்று குறிப்பிடப்படுகிறது. இப்பெருவழி பண்டைய சேர நாடான கேரளத்தை இணைப்பதாகும். சேலம் மாவட்டம் ஆறகளூரில் உள்ள கி.பி. 13 ஆம் நூற்றாண்டுக் கல்வெட்டு ‘மகதேசன் பெருவழி’ எனக் குறிப்பிட்டுக் காஞ்சிபுரத்திற்கு உள்ள தொலைவினைக் கூறுகிறது.
பெருவழிகளின் பக்கவாட்டில் கற்கள் நடப்பட்டு வணிக மையங்களுக்கானத் தொலைவினைக் ‘காதம்’ என்ற அளவில் குறிப்பிட்டன. ‘அதியமான் பெருவழி’ நாவற் வளத்திற்கு காதம் 27, என்றும் 29 என்றும் குறிப்பிடும் இரு மைல் கற்கள் (காதக் கற்கள்) தருமபுரிக்கு அருகில் ஒரே பெருவழிச் சாலையில் இரு இடங்களில் கண்டறியப்பட்டுள்ளன.